கான்பூர் டெஸ்ட்: 3-ம் நாள் ஆட்டமும் கைவிடப்பட்டது

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. வங்கதேசம் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை எடுத்தது.
கான்பூர் டெஸ்ட்: 3-ம் நாள் ஆட்டமும் கைவிடப்பட்டது
Published on

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த வாரம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.

இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) துவங்கியது இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் நாளிலேயே மழை காரணமாக போட்டி தடைப்பட்ட நிலையில், வங்கதேசம் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை எடுத்திருந்தது.

இதைத் தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டமும் மழை காரணமாக தொடர்ந்து தாமதமாகி வந்தது. காலை முதலே பலமுறை களத்தில் விளையாடுவதற்கு ஏற்ற சூழல் உள்ளதா என்று அம்பயர்கள் மற்றும் போட்டி நடுவர்கள் ஆய்வு செய்து வந்தனர்.

எனினும், போட்டி மதியம் வரையிலும் ஆடுகளம் போட்டியை நடத்த அனுமதிக்காத காரணத்தால், மூன்றாம் நாள் ஆட்டமும் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு விட்டது. மூன்றாம் நாள் ஆட்டமும் கைவிடப்பட்டது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com