

பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆளும் கட்சியான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பாஜக சார்பில் பிரதமர் மோடியும் பல்வேறு இடங்களில் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.
தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி பல கேள்விகளை முன்வைத்து, முதல் மந்திரி சித்தராமையாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மோடியின் கேள்விகளுக்கு சித்தராமையாவும் தகுந்த பதிலளித்து வருகிறார்.
இந்நிலையில், கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல் மந்திரி சித்தராமையா, பிரதமர் மோடிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் மாளவல்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நரேந்திர சுவாமியை ஆதரித்து முதல் மந்திரி சித்தராமையா பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், அனைத்து கிராமங்களிலும் சாலைகள் போடப்பட்டுள்ளன. குடிநீர் வசதி மற்றும் வீடு கட்டி தரப்பட்டுள்ளது. இதற்கு நரேந்திர மோடியும், நாங்களுமே காரணம் என்றார்.
இதைக்கேட்டதும் மேடையில் இருந்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அங்கிருந்த வேட்பாளர் நரேந்திர சுவாமி குறுக்கிட்டு தவறை சுட்டி காட்டவே, சித்தராமையா தனது தவறை திருத்திக் கொண்டார். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. #KarnatakaElections #Congress #CMSiddaramaiah #PMModi