

கொழும்பு:
இலங்கையில் பயங்கர புயலால் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகள் மற்றும் வீடுகள் மீது விழுந்ததில் 7 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 5 மீனவர்கள் மாயமானார்கள். ஏராளமான வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் இலங்கையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழையால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நகரமே இருளில் மூழ்கின. சென்னை, பெங்களூருவில் இருந்து கொழும்பு வந்த விமானங்கள் மட்டாலா விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன.
இந்தநிலையில், பாராளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவியாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.