

திருப்பூர் பெருமாநல்லூரில் நடைபெற்ற அ.தி.மு.க. அம்மா அணி ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி பேசியதாவது-
ஆர்.கே. நகர் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை வேட்பாளராக மீண்டும் போட்டியிட ஆட்சி மன்ற குழு முடிவு எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ. பன்னீர் செல்வம் கட்சிக்கு துரோகம் செய்தவர். முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துரோகம் செய்து விட்டார். ஆனால் அவர் உழைப்பால் வந்தது முதல்-அமைச்சர் பதவி என கூறி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி 91,2001-ல் வெற்றி பெற்ற போது அவருக்கு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா அமைச்சர் பதவி வழங்கவில்லை.
2011-ம் ஆண்டு நான் அமைச்சராக இருந்த போது தான் எடப்பாடி பழனிசாமிக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் பதவியை கொடுத்தது துணை பொதுச்செயலாளர் சசிகலாதான்.
மேற்கு மண்டலத்தில் இருப்பவர்கள் விசுவாசமாக இருப்பார்கள் என இங்கு பேசியவர்கள் கூறினார்கள். ஆனால் இதனை மாற்றி எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்து விட்டார்.
ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடும் தினகரனை வெற்றி பெற செய்து உண்மையான அ.தி.மு.க. நாம் தான் என நிரூபிக்க வேண்டும்.
ஒரு ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். மட்டுமல்லாது ஓராயிரம் ஓ.பி.எஸ்., ஈபி.எஸ். வந்தாலும் தினகரனை வெற்றி பெற முடியாது.
எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து காண்பிக்கட்டும். அவருக்கு அந்த தெம்பு, திராணி இல்லை. ஆட்சி மாற்றம் உருவாக அனைவரும் பாடுபட வேண்டும்.