

மாஸ்கோ:
கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. குறிப்பாக சமூக விலகலை கடைப்பிடிக்கும்படி மக்களை அறிவுறுத்தி வருகின்றன. இதற்காக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன.
அவ்வகையில் ரஷியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு ஓட்டல்கள் மற்றும் தேநீர் கடைகள் அனைத்தையும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
பொது உணவு விநியோக அமைப்புகள் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க வேண்டும். உணவு டெலிவரிக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் வரையில் ரிசார்ட்டுகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை வேலை செய்யாத வாரமாக அறிவித்துள்ளார் அதிபர் புதின். சுகாதாரத்துறை வழங்கும் அறிவுறுத்தல்களை மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மிகப்பெரிய நாடுகளை ஒப்பிடுகையில் ரஷியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவுதான். மொத்தம் 840 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.