மு.க.ஸ்டாலினின் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக அவதூறு பரப்புகின்றனர் - ஆர்.எஸ்.பாரதி

மு.க.ஸ்டாலினின் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக அவதூறு பரப்புகின்றனர் என தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்தில் ஆஜரான பிறகு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி
Published on

சென்னை:

தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இதன் நிர்வாக இயக்குனராக உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார்.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக பா.ஜ.க. புகார் தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக, பா.ஜ.க. மாநில செயலாளர் சீனிவாசன் தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்திடம் புகார் மனு அளித்தார்.

இதற்கிடையே, முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் தொடர்பாக, முரசொலி அறக்கட்டளைக்கு  தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முரசொலி அலுவலக நில விவகாரம் தொடர்பாக தேசிய பட்டியல் இனத்தவர் ஆணைய அலுவலகத்தில் முரசொலி அறங்காவலரும், தி.மு.க. அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார். விசாரணையின்போது, தலைமை செயலாளர் சண்முகமும் ஆஜராகினார். அது போல் புகார் மனு அளித்த சீனிவாசனும் ஆஜரானார்.

ஆணையத்தில் ஆஜரான பிறகு ஆர்.எஸ். பாரதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மு.க.ஸ்டாலினின் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக அவதூறு பரப்புகின்றனர். முரசொலி நில விவகாரத்தில் தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் தலையிட உரிமை இல்லை.

முரசொலி நிலம் தொடர்பான உரிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. ஆனால் புகார் தந்த சீனிவாசனிடம் முரசொலி இடம் பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரம் இல்லை. தலைமைச் செயலாளர் சண்முகமும், புகார் தந்த சீனிவாசனும் ஆணையத்திடம் அவகாசம் கேட்டு உள்ளனர் என கூறினார்.

புகார் அளித்த சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது;-

அரசிடம் இருக்கும் ஆவணங்கள் குறித்து கேட்டுள்ளோம். ஆவணங்களை தர மாநில அரசு அவகாசம் கேட்டுள்ளது. இடைக்கால அறிக்கை தர இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. எங்களிடம் உள்ள ஆதாரங்களை விசாரணை ஆணையத்திடம் அளித்துள்ளோம் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com