தமிழகம் முழுவதும் ரஜினிகாந்த் கட்சிக்கு நிர்வாகிகள் தேர்வு

தூத்துக்குடி மாவட்டத்துக்கு நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணி இன்று நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஸ்டாலின் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் ரஜினிகாந்த் கட்சிக்கு நிர்வாகிகள் தேர்வு
Published on

தமிழக அரசியல் களத்தில் கால் பதிக்க ரஜினியும், கமலும் தீவிரம் காட்டி வருகிறார்கள். வருகிற சட்டமன்ற தேர்தலுக்குள் புதிய கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட இருவரும் திட்டமிட்டுள்ளனர். இதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

நடிகர் ரஜினி அரசியலில் ஈடுபடப் போவதாக கடந்த டிசம்பர் 31-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டார். தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதியானது. ரஜினி எப்படியும் அரசியலுக்கு வருவார் என்று கடந்த 20 ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களின் ஏக்கமும் தீர்ந்தது.

புதிய கட்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தீவிரமாக பொது மக்களை ரஜினி மக்கள் மன்றத்தில் சேர்க்கவும் அவர் உத்தரவிட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகிறார்கள். ரஜினி மக்கள் மன்றத்தை பலப்படுத்தும் வகையில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளை நியமிக்க திட்டமிடப்பட்டது. இதன்படி முதல் கட்டமாக வேலூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

இப்போது இந்த 3 மாவட்டங்களுக்கும் மாநகர, நகர, ஒன்றிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ரஜினி உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்துக்கு நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணி இன்று நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஸ்டாலின் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதற்காக ராகவேந்திரா மண்டபத்தில் நகர, ஒன்றிய வாரியாக இருக்கைகள் போடப்பட்டிருந்தன. ரஜினியின் புதிய கட்சியில் பொறுப்புகளை பெறுவதற்காக தூத்துக்குடி மாவட்ட ரசிகர்கள் போட்டி போட்டிக் கொண்டு ஏற்கனவே விண்ணப்பித்திருந்தனர். அவர்களே இன்றைய தேர்வுக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ரஜினி மன்றத்தின் அகில இந்திய தலைமை நிர்வாகிகள் சுதாகர், ராஜீவ் மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகிகள் முன்பு பேசிய அவர்கள், ‘‘ரஜினியின் கரத்தை வலுப்படுத்த நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அதிக அளவில் ரஜினியின் மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டனர். பின்னர் தனி அறையில் நிர்வாகிகள் நியமனத்துக்கு நேர்காணல் நடத்தினர். ஐந்து ஐந்து பேர்களாக அழைத்து நேர்காணல் நடத்தப்பட்டது. இன்றைய நேர்காணலில் பங்கேற்க பெண்கள் 3 பேர் மட்டுமே வந்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com