

மதுரை:
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கினார். மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட எம்.ஜி. ஆர். மன்ற செயலாளர் சந்திரன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
2021-ம் ஆண்டில் நாம் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறோம். இன்றைக்கு அம்மாவின் ஆசியுடன் ஒரு பொற்கால ஆட்சியை முதல்வரும், துணை முதல்வரும் நடத்தி வருகின்றனர். கடந்த 4 ஆண்டு கால சாதனையை மக்களிடத்தில் எடுத்துச் சொன்றால் போதும், நமக்கு வெற்றி நிச்சயம். இன்றைக்கு ஒவ்வொரு இல்லத்திலும் அம்மாவின் திட்டங்கள் உள்ளன.
திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதிகளில் 13 மாநகராட்சி வார்டுகளும், அதேபோல் திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் 106 கிளைக் கழகங்களும் உள்ளன.
திருப்பரகுன்றம் தொகுதியில் இருக்கிற 295 பூத்களில் நீங்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்து இமாலய வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க. கோட்டையாக்க வேண்டும். இதற்கு நீங்கள் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.