

புதுச்சேரி:
புதுவை இந்திரா காந்தி அரசு ஆஸ்பத்திரியில் புதுவை மட்டுமின்றி அண்டை மாநிலமான தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த ஆஸ்பத்திரிக்கு மின் சப்ளை செய்யும் கண்ட்ரோல் ரூமில் இன்று அதிகாலை திடீரென மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது. புகை மண்டலமாக கிளம்பியதால் உடனடியாக அப்பகுதியில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.
பின்னர் இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அதிகாரி மனோகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
பின்னர் உடனடியாக தீப்பற்றி எரிந்த இடத்தில் சீரமைக்கப்பட்டு மீண்டும் மின் சப்ளை கொடுக்கப்பட்டது.
மின்துறை இளநிலை பொறியாளர் அம்மையப்பன் தலைமையில் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டதால் அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. எனினும் இந்த திடீர் தீ விபத்தால் அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #TamilNews