

புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.
விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி தியாகிகளை கவுரவித்து இனிப்புகள் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
புதுவை மாநிலத்துக்கு வணிக வரி, கலால் வரி மூலம் நிதி கிடைக்கிறது. சுற்றுலாவில் இருந்து பெரிய அளவுக்கு வருமானம் இல்லை. புதுவை, இந்தியாவுடன் இணைந்தபோது 90 சதவீதம் மானியம் கிடைத்தது. அது படிப்படியாக குறைந்து தற்போது 26 சதவீதமாகி விட்டது.
மத்திய அரசு நமக்கு கொடுக்க வேண்டிய ரூ.3 ஆயிரம் கோடி மானியத்தில் ரூ.1,650 கோடி மட்டுமே பெறுகிறோம்.
தியாகிகள் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்து அரசு கவர்னருக்கு கோப்பு அனுப்பியது. அந்த கோப்பு நிலுவையில் உள்ளது. விரைவில் தியாகிகள் ஓய்வூதியம் ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
இவ்வாறு நாராயணசாமி பேசினார். #Narayanasamy