தனியார் தொழிற்சாலை தீ விபத்தில் 2 தொழிலாளிகள் பலி

தென்காசி அருகே தனியார் தொழிற்சாலை தீ விபத்தில் உடல் கருகிய 2 தொழிலாளிகள் பலியாகினர். மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் பொடி தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து
மஞ்சள் பொடி தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து
Published on

செங்கோட்டை:

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டரை சேர்ந்தவர் சிவ்கான் படேல். இவர் தென்காசி அருகே உள்ள வல்லத்தில் மஞ்சள்பொடியில் இருந்து ரசாயனம் தயாரித்து, அதை மொத்தமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

இந்த தொழிற்சாலையில் கடந்த 12-ந்தேதி வழக்கம் போல் ரசாயனம் தயாரிக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது அதிகாலை 5 மணி அளவில் அங்கு திடீரென தீப்பிடித்துக் கொண்டது. எதிர்பாராமல் பற்றிய இந்த பயங்கர தீயினால், பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தார்கள். தீ விபத்து காரணமாக தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய கரும்புகை அந்த பகுதியை சூழ்ந்தது.

இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களான வல்லத்தை சேர்ந்த அமல்ராஜ் (வயது 45), செங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் (32), காசிமேஜர்புரத்தை சேர்ந்த செண்பகம் (84), பிரானூர் பார்டரை சேர்ந்த கண்ணன் (21) ஆகிய 4 பேர் உடல் கருகினர்.

இதுகுறித்த தகவல் அறிந்த தென்காசி, செங்கோட்டை தீயணைப்பு துறையினர் மற்றும் செங்கோட்டை, குற்றாலம் போலீசார் அந்த தொழிற்சாலைக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இதில் காவலாளியாக வேலை பார்த்த செண்பகத்தை மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மற்ற 3 பேருக்கும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் நேற்று நள்ளிரவு காவலாளியாக வேலை பார்த்த செண்பகம் சிகிச்சை பலன் அளிக்காமல் மதுரை ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார். இன்று அதிகாலை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கண்ணன் என்பவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

மற்றவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com