

பெய்ஜிங்:
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று சீனா புறப்பட்டு சென்றார். அவர் பதவி ஏற்ற பிறகு சீனாவுக்கு செல்வது இது நான்காவது தடவை ஆகும்.
பிரதமர் மோடி நேற்று இரவு சீனாவில் உள்ள வுகன் நகரை சென்றடைந்தார். அங்கு அவரை சீன வெளியுறவு துறை துணை மந்திரி காங் சான்யு, சீன தூதர் லூ சஹோய் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் வரவேற்றனர்.
வுகன் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே இன்றும், நாளையும் சாதாரண முறையிலான சந்திப்பு நடைபெறுகிறது.
வுகன் நகரில், ‘ஈஸ்ட் லேக்’ என்ற விடுமுறைக்கால சுற்றுலா தலம் உள்ளது. மறைந்த சீன தலைவர் மாசேதுங்குக்கு அது பிடித்தமான இடம் ஆகும். அங்குள்ள யங்ட்சி ஆற்றில் மாசேதுங் நீந்தி மகிழ்வார். ஆற்றை ஒட்டி அழகான தோட்டம் உள்ளது. மாசேதுங் தங்கி வந்த விடுமுறைக்கால தங்குமிடம், தற்போது அவரது மணி மண்டபமாக மாற்றப்பட்டுள்ளது.
அத்தகைய சிறப்புவாய்ந்த பகுதியில்தான், மோடியும், ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அவர்கள் உலகளாவிய, பிராந்திய மற்றும் இருதரப்பு பிரச்சினைகள் குறித்து பேசுவார்கள் என்று தெரிகிறது.
இரு தலைவர்களும் ஆற்றில் படகு சவாரி செய்து மகிழ்வார்கள். ஆற்றங்கரையில், மொழி பெயர்ப்பாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு, நடந்து செல்வார்கள். மாசேதுங் மணி மண்டபத்தை மோடிக்கு ஜி ஜின்பிங் சுற்றிக் காட்டுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு சீன அதிபர் வந்தபோது, அவருக்கு பிரதமர் மோடி வழிகாட்டியாக செயல்பட்டார். அதுபோல், இப்போது மோடிக்கு ஜி ஜின்பிங் வழிகாட்டியாக செயல்பட உள்ளார். இந்த சந்திப்பில் ஒருமித்த கருத்து உருவானால், இருநாட்டு உறவில் புதிய திருப்பம் ஏற்படும் என்று இருதரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள். #PMModi #China #Tamilnews