டெல்லி ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திய போலீசார்

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், டெல்லி ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
போராட்டக்காரர்களின் பொருட்களை போலீசார் அப்புறப்படுத்திய காட்சி
போராட்டக்காரர்களின் பொருட்களை போலீசார் அப்புறப்படுத்திய காட்சி
Published on

புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் ஏராளமான பெண்கள் திரண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று மாதங்களுக்கும் மேலாக இவர்களின் போராட்டம் நீடித்தது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் டெல்லி முடக்கப்பட்டு, வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை போலீசார் இன்று அப்புறப்படுத்தினர். 

இதுபற்றி துணை கமிஷனர் (தென்கிழக்கு) ஆர்.பி.மீனா கூறுகையில், ‘கொரோனா அச்சம் காரணமாக டெல்லி முடக்கப்பட்டிருப்பதால், ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டோம். ஆனால், அவர்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேற மறுத்தனர். இதனால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com