2100-ம் ஆண்டுக்குள் பனிக்கரடிகள் இனமே அழிந்துவிடும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பருவநிலை மாற்றம் காரணமாக ஆர்ட்டிக் பகுதியில் உள்ள போலார் பனிக்கரடிகள் இனம் 2100-ம் ஆண்டில் முழுவதும் அழிந்து விடும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
போலார் பனிக்கரடிகள்
போலார் பனிக்கரடிகள்
Published on

ஒட்டாவா:

ஆர்ட்டிக் பனிப்பிரதேசத்தில் வாழ்ந்து வரும் அரிய வகை விலங்குகளில் ஒன்று போலார் பனிக்கரடிகள். இந்த வகை கரடிகளுக்கு மீன்கள் மற்றும் கடல் சீல்கள் முக்கிய உணவாக உள்ளது.

அரிய வகை விலங்கினமான பனிக்கரடி உலக அளவில் மொத்தமாக 26 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் மட்டுமே உயிருடன் உள்ளது. இவற்றை பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், தற்போது உலக வெப்பமயமாதல் காரணமாக பனிப்பிரதேசங்கள் அனைத்தும் வேகமாக உருகி வருகின்றன. இதனால் பனிப் பிரதேசங்களில் வாழும் பல்வேறு உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளன. குறிப்பாக பனிக்கரடி அந்த பட்டியலில் முன்னிலையில் உள்ளது.

பனிப்பிரதேசங்கள் வேகமாக உருகி வருவதால் பனிக்கரடிகள் தங்கள் வாழ்விடங்களையும், உணவுகளையும் இழந்து வருகின்றன. மேலும், அவை மனிதர்கள் வாழும் நிலப்பரப்பு நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளன. 

இந்நிலையில், பருவநிலை மாற்றம், வெப்பமயமாதல் நிலை இப்படியே தொடர்ந்தால் ஆர்ட்டிக்க் பகுதியில் இருந்து உணவு, தங்குமிடத்திற்காக இடம்பெயர்தலை சந்தித்து வரும் போலார் பனிக்கரடி இனம் 2100-ம் ஆண்டில் முழுவதும் அழிந்து விடும் என கனடாவின் டோரோண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

உலக வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தை தடுக்க தவறும் பட்சத்தில் கூடிய விரைவில் பல்வேறு அரியவகை உயிரினங்கள் முற்றிலும் அழிந்து விடும் என இந்த ஆராய்சி முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com