காங்கிரஸ் தலைவரின் பாராட்டு - டுவிட்டரில் நன்றி தெரிவித்த மோடி

அமெரிக்காவில் பேசியதற்கு பாராட்டு தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோராவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

பிரதமர் மோடி அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் என்.ஆர்.ஜி. மைதானத்தில் நடைபெற்ற 50 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரமாண்ட கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் இந்தியா- அமெரிக்கா இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு தகவல்களை வெளியிட்டார்.

மோடி நலமா? என்ற பெயரில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப்வுக்கு ஆதரவாக பேசியதாக காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மோடியின் பேச்சு வெளியுறவு கொள்கையை சிதைக்கும் வகையில் இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறி உள்ளனர்.

ஆனால் காங்கிரஸ் இளம் தலைவர்களில் ஒருவரான மிலிந்த் தியோரா பிரதமர் மோடியின் ஹூஸ்டன் நகர் பேச்சை வரவேற்றுள்ளார். இது தொடர்பாக தியோரா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடி பேசியது சிறப்பாக இருந்தது. இரு நாட்டு உறவை அது மேம்படுத்தும். இந்தியா-அமெரிக்கா உறவை அதிகரிக்க செய்ததில் எனது தந்தை முரளி தியோராவுக்கும் சிறப்பான பங்கு உண்டு.

அமெரிக்கா அதிபர் டிரம்ப், பிரதமர் மோடிக்கு சிறப்பான உபசரிப்பு அளித்துள்ளார். இதன் மூலம் அவர் நம்மை பெருமைப்படுத்தி உள்ளார்.

காங்கிரஸ் தலைவரின் இந்த பாராட்டை பா.ஜ.க. தலைவர்களே எதிர்பார்க்கவில்லை. மிலிந்த் தியோராவின் பாராட்டுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து டுவிட்டர் பதில் அளித்துள்ளார்.

அதில் அவர், “நீங்கள் கூறி இருப்பது சரிதான். உங்களது தந்தை முரளி தியோரா அமெரிக்கா-இந்தியா உறவுக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கி உள்ளார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்கா அதிபர் நம்மை அங்கீகரித்து இருப்பது உண்மையிலேயே தனித்துவம் ஆனது” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com