

புதுவை அருகே உள்ள சர்வதேச நகரமான ஆரோவில் உதயமாகி 50 ஆண்டுகள் ஆகிறது. இதன் பொன்விழா வருகிற 24-மற்றும் 25-ந்தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த பொன்விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி வருகிற 25-ந்தேதி புதுவை வருகிறார்.
அன்று காலை 10.45 மணிக்கு விமானம் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வரும் மோடிக்கு அரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மோடி புதுவை அரவிந்தர் ஆசிரமத்துக்கு வருகிறார். அங்கு அரவிந்தர் மற்றும் அன்னை சமாதியில் தரிசனம் செய்து மலரஞ்சலி செலுத்துகிறார். மேலும் அரவிந்தர் மற்றும் அன்னை சமாதி முன்பு அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்கிறார். இதன்பின்னர் ஆரோவில் சென்று பொன்விழாவில் பங்கேற்கிறார்.
இதனைதொடர்ந்து லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் நடைபெறும் பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
பிரதமர் மோடி புதுவை வருகையையொட்டி புதுவை மற்றும் ஆரோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆரோவில்லில் முகாமிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மேற்பார்வையில் தனிப்பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு போலீசாரும் ஆரோவில்லில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதுபோல் லாஸ்பேட்டை விமான நிலையம், பொதுக்கூட்டம் நடைபெறும் லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானம் மற்றும் அரவிந்தர் ஆசிரமம் பகுதிகளிலும் போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார்கவுதம் மேற்பார்வையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள்.