

குஜராத் மாநிலத்தில் உள்ள பழைய துவாரகா நகரையும் புதிய துவாரகா நகரையும் இணைக்கும் வகையில் 2.32 கிலோமீட்டர் நீளத்துக்கு தொங்கும் பாலம் அமைக்க மாநில அரசு தீர்மானித்தது. 27.20 மீட்டர் அகலம் கொண்ட நான்கு வழிப்பாதையாக அமைக்கப்படும் இந்த பாலத்தின் இருபுறமும் 2.50 மீட்டர் அகலம் கொண்ட நடைபாதை மற்றும் சூரிய மின்சாரத்தின் மூலம் எரியும் சாலை விளக்கு என நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
இதற்கு முன்னர் இந்தப் பகுதிக்கு செல்ல படகுகள் மற்றும் பரிசல்களை மக்கள் பயன்படுத்திவரும் நிலையில், துவாரகா நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த புதிய பாலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். புதிய துவாரகாவுடன் பழைய துவாரகா நகரை இணைக்கும் இந்தப் பாலம் துவாரகா தீவில் உள்ள மக்களுக்கும் பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.