

புதுச்சேரி:
கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-1 பொதுத்தேர்வினை புதுவை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 6 ஆயிரத்து 949 மாணவர்களும், 7 ஆயிரத்து 906 மாணவிகளும் ஆக 14 ஆயிரத்து 855 பேர் எழுதினார்கள். அதில் 6 ஆயிரத்து 465 மாணவர்களும், 7 ஆயிரத்து 615 மாணவிகளுமாக 14 ஆயிரத்து 80 பேர் தேர்ச்சி பெற்றனர்.
அதாவது 94.78 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 5.43 சதவீதம் அதிகம் ஆகும். அரசு பள்ளிகளை பொருத்தவரை புதுச்சேரி பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படித்த 88.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 9.97 சதவீதம் அதிகம் ஆகும்.
காரைக்கால் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் படித்த 90.87 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 13.72 சதவீதம் அதிகமாகும். புதுச்சேரி பகுதியில் 5 அரசு பள்ளிகளும், 55 தனியார் பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. காரைக்காலில் 4 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை அடைந்துள்ளது.
வேதியியல், பொருளியல் பாடத்தில் தலா 2 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 5 பேரும், வணிகவியலில் ஒருவரும், கணக்குப்பதிவியலில் 18 பேரும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் 9 பேரும், வணிக கணிதத்தில் ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். #Plus1Result