

சென்னை:
நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து மருத்துவ படிப்பில் சேருவதற்கு மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர். சில அரசியல் கட்சிகள் இந்த அறிவிப்பு போதாது நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில், மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவருக்கு அறிவிக்கப்பட்ட 85 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து ஐகோட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த சிபிஎஸ்சி மாணவர் தாரணீஷ்குமார் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். சிபிஎஸ்சி மாணவர்களுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு போதுமானதாக இருக்காது என்றும் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் குளறுபடி நடைபெறுவதாகவும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை மனு மீதான விசாரணையை ஜூலை 5-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அதற்குள் இந்த மனு தொடர்பாக தமிழக அரசு மற்றும் மருத்துவ கவுன்சில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.