

பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலை பகுதியான தாண்டிக்குடி, பெரியூர், பெருங்கானல், பள்ளத்துக்கால்வாய், சேம்படிஊத்து ஆகிய பகுதிகளில் ஏராளமாள ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் காப்பி, வாழை, ஆரஞ்சு, மிளகு, அவரை, பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர்.
இதையொட்டி உள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், முயல் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.
தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் இரை மற்றும் தண்ணீர் தேடி விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளில் புகுந்து வன விலங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் செய்வதறியாது உள்ளனர்.
இதேபோல் யானைகள் கூட்டம் திடீரென விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. ஆண்டிதேரடி என்பவரின் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த வழை, காப்பி போன்றவற்றை சேதப்படுத்தி சென்றன. தோட்டங்களில் சோலார்வேலி அமைத்தபோதும் யானைகள் அவற்றை பிடுங்கி எறிந்து விட்டு விவசாய நிலங்களுக்கு புகுந்து விடுகின்றன.
இது குறித்து வனத்துறையினரிடம் பல முறை புகார் அளித்தும் விலங்குகள் குடியிருப்புக்குள் புகுவதை தடுக்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே வனத்துறையினர் தண்ணீர் தொட்டி உள்ளிட்டவற்றை வனப்பகுதியில் அமைத்து யானைகள் ஊருக்குள் புகுவதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுதி உள்ளனர்.