

புதுடெல்லி:
பிரீமியம் ரெயில்களில் ‘பிளெக்சி பேர்‘ என்ற மாறுபடும் கட்டண முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதில், ஒவ்வொரு 10 சதவீத படுக்கைகள் முன்பதிவு முடிந்தவுடன், 10 சதவீதம் கட்டணம் அதிகரிக்கும். இந்த கட்டண முறையை மறுஆய்வு செய்வதற்காக, ரெயில்வே வாரியம், கட்டண மறுஆய்வு குழுவை அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை ரெயில்வே வாரியத்திடம் நேற்று முன்தினம் சமர்ப்பித்தது.
அதில், விமான நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்கள் கடைபிடிக்கும் கட்டண முறையை பின்பற்றுமாறு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இந்த சிபாரிசுகளை ரெயில்வே வாரியம் ஏற்றுக்கொண்டால், இவை அமலுக்கு வரும். முக்கிய சிபாரிசுகள் வருமாறு:-
விமானங்களில் முன்புற இருக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுபோல், ரெயில்களில் கீழ் படுக்கைகளுக்கு (லோயர் பெர்த்) அதிக கட்டணம் வசூலிக்க வேண்டும். பயணிகளின் வரவேற்பை பெற்ற வழித்தடங்களில் இயக்கப்படும் ரெயில்களிலும், வசதியான நேரங்களில் இயக்கப்படும் ரெயில்களிலும் கட்டணத்தை உயர்த்த வேண்டும்.
பண்டிகை காலங்களில் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும். மற்ற மாதங்களில் கட்டணத்தை குறைக்க வேண்டும். சமையலறை பெட்டி இணைக்கப்பட்ட ரெயில்களில் பிரீமியம் கட்டணம் வசூலிக்க வேண்டும். அசவுகரியமான நேரங்களில், குறிப்பாக இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை, சேருமிடத்தை அடையும் ரெயில்களில் கட்டண தள்ளுபடி அளிக்க வேண்டும்.