பாராளுமன்ற தேர்தலில் தினகரனுடன் தேமுதிக கூட்டணியா? - துணை பொதுச்செயலாளர் சுதீஷ் பேட்டி

பாராளுமன்ற தேர்தலில் டி.டி.வி. தினகரனுடன், தே.மு.தி.க. கூட்டணி வைக்குமா? என கேட்டதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் சுதீஷ் பதில் அளித்தார். #DMDK #Sudhish
தே.மு.தி.க.துணை பொதுச்செயலாளர் சுதீஷ் திருச்சி கோர்ட்டில் ஆஜராக வந்த போது எடுத்த படம்.
தே.மு.தி.க.துணை பொதுச்செயலாளர் சுதீஷ் திருச்சி கோர்ட்டில் ஆஜராக வந்த போது எடுத்த படம்.
Published on

திருச்சி:

திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தே.மு.தி.க. சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் எல்.கே. சுதீஷ் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சுதீஷ், மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி கணேஷ், நிர்வாகிகள் அலங்கராஜ், மில்டன் குமார் உள்பட 7 பேர் மீது திருச்சி காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கு, திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண்-5 கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது சுதீஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 7 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள்.

சாட்சிகள் விசாரணை முடிந்ததும் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற 14-ந்தேதிக்கு ஒத்தி வைத்து மாஜிஸ்திரேட் நாகப்பன் உத்தரவிட்டார்.

கோர்ட்டில் இருந்து வெளியே வந்த சுதீஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார். விரைவில் தே.மு.தி.க.வின் மாநில மாநாடு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இந்த மாநாட்டில் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசுவார்’ என்றார்.

இதனை தொடர்ந்து நிருபர்கள் பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. டி.டி.வி. தினகரன் கட்சியான அ.ம.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறதே என கேட்டதற்கு அதற்கு, “இன்னும் காலம் இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் முடிவு செய்து அறிவிப்பார்” என பதில் அளித்தார்.  #DMDK #Sudhish

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com