இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் உச்சக்கட்ட பாதுகாப்பு

புத்தாண்டு மலருகின்ற இந்த இனிய நாளில், சென்னையில் இரவு முழுவதும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மெரினா சாலையில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. #NewYear2019 #marinabeach
இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் உச்சக்கட்ட பாதுகாப்பு
Published on

சென்னை:

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சாலையில் வாகனங்களில் அதிக வேகமாக செல்வதால் விபத்துக்களும் ஏற்படுகின்றன.

சென்னையில் நட்சத்திர ஓட்டல்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மெரினா கடற்கரையிலும் புத்தாண்டு கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக் கான பொதுமக்கள் கூடுவார்கள்.

எனவே விபத்து மற்றும் அசம்பாவிதங்கள் இன்றி புத்தாண்டை கொண்டாடுவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை போலீசார் விதித்துள்ளனர். நட்சத்திர ஓட்டல்களில் ஆட்டம் பாட்டத்துடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும். அங்கு நள்ளிரவு 1 மணி வரையே புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

நட்சத்திர ஓட்டல்களில் மது விருந்துடன் புத்தாண்டு கொண்டாடுபவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது என்றும், அவர்களை வீட்டில் கொண்டுவிட ஓட்டல் நிர்வாகமே ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். நீச்சல் குளத்தின் மேலே மேடை அமைத்தோ அல்லது நீச்சல் குளத்தின் அருகிலோ புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட பல்லாயிரக்கணக்கானோர் திரள்வார்கள். இரவு 9 மணிக்கே கூட்டம் கூடத் தொடங்கி விடும் என்பதால் 9 மணிக்கு மெரினா கடற்கரை சாலை மூடப்படும். அதன் பிறகு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

மெரினா கடற்கரையில் நள்ளிரவு 12 மணியளவில் பொதுமக்கள் மத்தியில் ஒவ்வொரு ஆண்டும் போலீஸ் கமி‌ஷனர் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நள்ளிரவு 12 மணிக்கு போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மெரினா கடற்கரையில் கேக் வெட்டுகிறார். பின்னர் அங்குள்ள மக்களுக்கு கேக் வழங்கப்படுகிறது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்ட அனுமதி இல்லை. அதை மீறி குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.

சென்னையில் இரவு முழுவதும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இரவு 8 மணி முதல் 12 மணிவரை ஒரு ஷிப்டாகவும், நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணிவரை மற்றொரு ஷிப்டாகவும் போலீசார் பணியாற்ற உள்ளனர். பைக் ரேசில் ஈடுபடுபவர்களை தடுக்க போலீசார் தனியாக குழு அமைத்து செயல்படுகிறார்கள்.

மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்வதை தடுக்க முக்கிய மேம்பாலங்கள் மூடப்படுகின்றன. முக்கிய சாலைகளில் கூடுதலான போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவதை தடுக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் வைத்துள்ளனர்.  #NewYear2019 #marinabeach

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com