

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிப் பனாமா பேப்பர்ஸ் ஊழலில் குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து அவரது பதவி பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சாகித் அப்பாஸி பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார். அவர் தலைமையிலான புதிய மந்திரி சபையும் பதவியேற்றது.
பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியாக கவாஜா ஆசிப் பதவியேற்றார். பதவியேற்ற பின் இன்று, முதன்முறையாக பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “அண்டை நாடுகளுடன் நட்புறவு கொள்ளும் எண்ணத்தையே பாகிஸ்தான் கொண்டுள்ளது. ஆனால் அண்டை நாடுகளான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கின்றன. அண்டை நாடுகளுடனான நல்ல உறவை மேற்கொள்ள அமைதியாக இருப்பதால் எங்களை பலவீனமானவர்கள் என்று எண்ண வேண்டாம்”, என கூறினார்.
‘ஆப்கானிஸ்தானுடன் இணைந்து பாகிஸ்தானின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் செயல்களை இந்தியா செய்து வருகிறது. மேலும் அமெரிக்காவுடன் இணைந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நாசப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்தியா செயல்பட்டு வருகிறது‘ எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.