

ரஷியா மீது மேலைநாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை மீறி கச்சா எண்ணெய் கடத்தியதாகக் கூறி, பிரிட்டிஷ் கடற்படை கமாண்டோக்களால் கைது செய்யப்பட்டுள்ள இந்தியக் கப்பல் கேப்டன் அஜய் பாந்த்(38) பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக அவருடைய மனைவி ரிது பாந்த் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கேப்டன் அஜய் பாந்த் மீது இங்கிலாந்து அரசு தடைகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது.
கடந்த ஜூன் 14 அன்று, ரஷ்யாவின் உஸ்ட்-லுகா துறைமுகத்திலிருந்து சுமார் 98,000 டன் கச்சா எண்ணெயுடன் எகிப்து நோக்கிச் சென்று கொண்டிருந்த 'ஸ்மிர்டோஸ்' என்ற எண்ணெய் தாங்கி கப்பலை பிரிட்டிஷ் கடற்படை கமாண்டோக்கள் ஹெலிகாப்டர் மூலம் வழிமறித்து அதிரடியாகக் கைப்பற்றினர். ரஷியாவின் பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க இயங்கும் 'நிழல் கப்பல் படை' நெட்வொர்க்கில் இந்தச் சரக்குக் கப்பல் செயல்பட்டு வந்ததாக இங்கிலாந்து குற்றம் சாட்டுகிறது.
ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் ரிது பாந்த், "எனது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகக் கறையற்ற முறையில் கப்பல் துறையில் பணியாற்றி வருகிறார். அவர் கப்பலின் உரிமையாளர் மற்றும் நிறுவனத்தின் உத்தரவுகளை மட்டுமே செயல்படுத்தினார். சரக்குகளின் சட்டப்பூர்வ பின்னணி அல்லது தடைகள் குறித்து ஒரு கேப்டனுக்கு எந்த அதிகார அதிகாரமும் இருக்காது. அவர் தவறான நேரத்தில், தவறான இடத்தில் இருந்ததால் இப்போது பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கப்பலில் இருந்த 24 மாலுமிகளில் கேப்டன் அஜய் பாந்த் மட்டுமே தனிப்பட்ட முறையில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், வழக்கு விசாரணை வரவிருக்கும் டிசம்பர் 15 அன்று தொடங்கவுள்ளது.
ஒரு கப்பலின் நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, பணியில் இருக்கும் இந்திய கேப்டன் மீது இங்கிலாந்து அரசு குற்றவியல் நடவடிக்கை எடுத்திருப்பது சர்வதேச கடல்சார் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் 3,20,000-க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகளின் பாதுகாப்பிற்கு இந்தச் சம்பவம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக கடல்சார் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் லண்டனில் உள்ள தூதரகம் மூலம் அஜய் பாந்திற்குத் தேவையான தூதரக உதவிகளைச் செய்து வருகிறது.