வீட்டிற்கு செல்வதற்காக மதுபோதையில் பேருந்தை ஓட்டி சென்ற நபர்

குன்னங்குளம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திருடப்பட்டது. பல மணிநேர தேடுதலுக்கு பிறகு குருவாயூரில் திருடுபோன பேருந்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
kerala bus
Published on

கேரளாவின் குன்னங்குளம் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து அதிகாலை 5 மணிக்கு திருடப்பட்டது. இது தொடர்பாக பேருந்து உரிமையாளர் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். பின்னர் பல மணிநேர தேடுதலுக்கு பிறகு குருவாயூரில் திருடுபோன பேருந்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் குருவாயூரில் வசிக்கும் அஜித் என்கிற ஷாம்நாத் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் 6 மாதங்களுக்கு முன்பு இதே பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

குருவாயூர் செல்ல பேருந்து இல்லாததால், குன்னங்குளம் பேருந்து நிலையத்தில் நின்ற இந்த பேருந்தை மதுபோதையில் குருவாயூருக்கு ஓட்டி வந்ததாக அஜித் தெரிவித்தார்.

பின்னர் பேருந்தின் உரிமையாளர் தனது முன்னாள் ஊழியரை மன்னித்துவிட்டதால், போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் ஓட்டுநர் அஜித்தை விடுவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com