முன்பதிவின் போது 'டிப்ஸ்' கேட்கக் கூடாது: ஓலா, உபெர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

பயணிகள் வழங்கும் டிப்ஸ் தொகை முழுமையாகச் சம்மந்தப்பட்ட ஓட்டுநரின் கணக்கிற்கே செல்ல வேண்டும்.
Ola-Uber
Published on

ஓலா, உபெர் உள்ளிட்ட மொபைல் செயலி வாயிலான வாடகை கார் சேவைகளில், பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவே வாடிக்கையாளர்களிடம் 'டிப்ஸ்' கேட்பதற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பயணம் தொடங்குவதற்கு முன்பாக கூடுதல் பணம் செலுத்தக் கோரும் நடைமுறையை உடனடியாகச் செயலிகளிலிருந்து நீக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அனைத்து நிறுவனங்களுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பயணிகள் புகார்

சமீபகாலமாக ஓலா மற்றும் உபெர் போன்ற செயலிகளில் வாடகை வாகனங்களை முன்பதிவு செய்யும்போது, "முன்பண டிப்ஸ் வழங்குங்கள்", "கூடுதல் தொகையைத் தேர்வு செய்யுங்கள்" அல்லது "டிப்ஸ் அளித்தால் வாகனம் விரைவில் உறுதி செய்யப்படும்" என்ற பெயரில் குறுஞ்செய்திகள் காட்டப்பட்டு வந்தன. இதன் காரணமாக, கூடுதல் கட்டணம் செலுத்தாத பயணிகளின் கோரிக்கைகளை ஓட்டுநர்கள் நிராகரிப்பதாகவும், அவசரத் தேவையின் போது பயணிகள் மறைமுகமாக அதிகக் கட்டணம் செலுத்த வற்புறுத்தப்படுவதாகவும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்குப் பல்வேறு புகார்கள் குவிந்தன.

இந்த புகார்களை தீவிரமாகப் பரிசீலித்த மத்திய அரசு, மோட்டார் வாகன அக்ரிகேட்டர் வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, பயணிகள் தங்களது விருப்பத்தின் பேரில் வழங்கும் டிப்ஸ் தொகையை, பயணம் முழுமையாக முடிவடைந்த பிறகு மட்டுமே கோர முடியும். பயணம் தொடங்கும் முன் அல்லது முன்பதிவின் போது வாடிக்கையாளர்களுக்கு எந்தவித உளவியல் அழுத்தத்தையும் தரக்கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் உரிமை பாதுகாப்பு

மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, பயணிகள் வழங்கும் டிப்ஸ் தொகை முழுமையாகச் சம்மந்தப்பட்ட ஓட்டுநரின் கணக்கிற்கே செல்ல வேண்டும் என்றும், அதில் எந்தவொரு பிடித்தத்தையும் கார் சேவை நிறுவனங்கள் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்திற்கு முரணாகச் செயல்படும் மற்றும் வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்தும் எந்தவொரு செயலி அம்சமும் சட்டவிரோதமானதாகக் கருதப்படும் என்று அமைச்சகம் எச்சரித்துள்ளது.

பயணக் கட்டணத்தைத் தாண்டி முன்பே டிப்ஸ் கொடுத்தால் மட்டுமே கார் வரும் என்ற நிலை உருவாவதைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, வாடகை வாகனங்களை வழக்கமாகப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான மக்களுக்குப் பெரிய நிம்மதியை அளித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com