உ.பி: கடைகளில் பெயர்ப்பலகை.. பாஜக அரசின் முடிவுக்கு கூட்டணி கட்சிகள் போர்க்கொடி

இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சருமான சிராக் பஸ்வான் இந்த உத்தரப்பிரதேச பாஜக அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
உ.பி: கடைகளில் பெயர்ப்பலகை.. பாஜக அரசின் முடிவுக்கு கூட்டணி கட்சிகள் போர்க்கொடி
Published on

உத்தரப் பிரதேசத்தின் கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை கடை முன் பெயர்பலகையில் குறிப்பிட வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளிலிருந்தும் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன.

முதலாவதாக மத்தியில் பாஜக தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முக்கிய காரணமாக இருந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஒருங்கிணைந்த ஜனதா தளம் இந்த உத்தரவு ஏற்றத்தாழ்வுகளுக்கு உதாரணமாக அமையும் என்று கண்டித்திருந்தது.

மேலும் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சருமான சிராக் பஸ்வான் இந்த உத்தரப்பிரதேச பாஜக அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ஜாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் பிரிவினையை ஏற்படுத்தும் எதையும் தான் ஆதரிக்கவும் ஊக்குவிக்கவும் மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உ.பியில் என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் மற்றொரு கட்சியான ராஷ்டிரிய லோக் தள கட்சியின்  தலைவரும் பாராளுமன்ற எம்.பியுமான ஜெயந்த் சவுத்ரே, கன்வரை சேர்ந்தவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் எப்போதும் ஒருவரின் மதத்தை கேட்பதில்லை. அது முக்கியமும் இல்லை. சிந்திக்காமல் எடுத்த இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மதம் சார்ந்து பாஜக எழுப்பியுள்ள இந்த சர்ச்சைக்கு கூட்டணி கட்சித் தலைவர்களே கண்டனம் தெரிவித்து வருவது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com