மழை பெய்தும் மாறாத நிலை... இந்தியாவில் தொடரும் பருவமழை பற்றாக்குறை!

பீகார் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் நெல் மற்றும் சோளம் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
 Monsoon deficit  India
Published on

டெல்லி, ஹரியானா மற்றும் கிழக்கு ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் கடந்த வாரத்தில் பெய்த நல்ல மழை, அப்பகுதிகளில் நிலவி வந்த மழைப் பற்றாக்குறையைச் போக்க உதவிய போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த பருவமழைப் பற்றாக்குறையில் இது பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தகவல்களின் அடிப்படையில் நாட்டின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு:

மழை பற்றாக்குறை நிலவரம்

கடந்த 2-ஆம் தேதி நிலவரப்படி '12%' ஆக இருந்த நாட்டின் ஒட்டுமொத்த பருவமழை பற்றாக்குறை, நேற்று (ஆகஸ்ட் 9) '11%' ஆக மட்டுமே குறைந்துள்ளது. கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் அதிகபட்சமாக '25%' மழை பற்றாக்குறை பதிவாகியுள்ளது. தெற்கு தீபகற்ப இந்தியாவில் '17%' மற்றும் வடமேற்கு இந்தியாவில் '11%' பற்றாக்குறை பதிவாகியுள்ளது. பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் 20% மற்றும் அதற்கு மேற்பட்ட கடுமையான மழை பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன.

விவசாயத்தில் இதன் தாக்கம்

* நாட்டின் மொத்த விவசாயப் பரப்பளவில் சுமார் '88%' பகுதிகளில் கரீஃப் பருவச் சாகுபடி/விதைப்பு ஏற்கனவே முடிவடைந்துவிட்டது.

* இதனால், கடந்த வார மழை விதைப்பு பரப்பளவில் நிலவிய பற்றாக்குறையை 1% மட்டுமே குறைக்க உதவியுள்ளது.

* நாட்டின் முக்கிய கரீஃப் பயிரான 'நெல் சாகுபடி பரப்பு', கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இன்னமும் 4% குறைவாகவே உள்ளது. பீகார் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் நெல் மற்றும் சோளம் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அணை நீர்மட்டம் & மின் உற்பத்தி

இம்மாதத்தில் பெய்து வரும் இந்த மழை, நாட்டின் முக்கிய அணைகள் மற்றும் நீர்நிலைகளின் நீர் இருப்பை உயர்த்த உதவும். இது நீர்மின் உற்பத்திக்கும் மற்றும் அடுத்த சாகுபடி பருவத்திற்கும் சாதகமான சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வானிலை முன்னறிவிப்பு

வங்காளதேசம் மற்றும் வட வங்கக்கடலோரப் பகுதிகளில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, ஆகஸ்ட் 13 முதல் மேற்கு வங்காளம், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் மழை மீண்டும் தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com