

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மீது மதுபானம், முட்டைகள் மற்றும் தக்காளிகளை வீச முயன்ற முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ரவ்னீத் சிங் பிட்டுவை பஞ்சாப் காவல்துறை கைது செய்தது.
நேற்று பாஜகவின் 'போதை இல்லாத பஞ்சாப் யாத்திரை'யின் போது பிட்டுவின் வாகன அணிவகுப்பு மீது முட்டைகளும் தக்காளிகளும் வீசித் தாக்கப்பட்டது. தனது வாகன அணிவகுப்பு தாக்கப்பட்டதாகவும், அதில் இருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் பிட்டு குற்றம் சாட்டியிருந்தார்.
மக்களைக் கைது செய்வதாலோ அல்லது வழக்குகள் பதிவு செய்வதாலோ மக்களின் குரலை அடக்க முடியாது என்று பிட்டு பின்னர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று 'கிசான் மேளா'வில் பங்கேற்பதற்காக பகவந்த் மான் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்திற்கு வந்தபோது ஒரு கையில் மது பாட்டிலையும், மறுகையில் முட்டை மற்றும் தக்காளியையும் ஏந்தியபடி நுழைவாயிலில் தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்திய பிட்டு, வாகன அணிவகுப்பு கடந்து சென்றபோது முதலமைச்சரை நோக்கி மது பாட்டிலை உயர்த்தினார்.
நேற்றைய தாக்குதலுக்குப் பின்னால் பகவந்த் மான் அரசு இருப்பதாகக் குற்றம் சாட்டிய பிட்டு, முட்டைகளையும் தக்காளிகளையும் திருப்பிக் கொடுக்கவே இன்று முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு வந்ததாகக் கூறினார்.
அந்த பாட்டிலை பகவந்த் மானிடம் திருப்பி தருவதாகவும், அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் அமர்ந்துகொண்டு பஞ்சாபைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும்போது முதலமைச்சர் பகவந்த் மான் மது அருந்தி மகிழ வேண்டும் என்றும் பிட்டு எள்ளலாக தெரிவித்தார். அங்கு ஆதரவாளர்களுடன் அமளியில் ஈடுபட்ட பிட்டுவை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.