

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத், அகமதாபாத், கேடா தபி மற்றும் டாங்ஸ், வால்சாட் உள்ளிட்ட மாவட்டங்களில் புதன்கிழமையில் இருந்து இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று மாலை வரையிலும் இந்த கனமழை நீடித்தது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தன.
குறிப்பாக வால்சாட் மாவட்டத்தில் உள்ள உம்பேர்கான் தாலுகா இந்த கனமழையால் கடுமையாக பாதித்தது. இங்கு 36 மணி நேரத்தில் 1200 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வால்சாட் பகுதிகளில் இருந்து 1200 பேர் மீட்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை காரணமாக 22 ஆயிரம் பேர் சொந்த இடங்களில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புக்குழு (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழு (SDRF) குவிக்கப்பட்டுள்ளது. நவ்சாரி மற்றும் வால்சாட் மாவட்டங்களில் ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நிவாரணப்பணி, மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்து. பிரதமர் மோடி குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேலிடம் இது தொடர்பாக பேசியுள்ளார். சாத்தியமான அனைத்து வகை உதவிகளும் மத்திய அரசு வழங்கும் என உறுதி அளித்துள்ளார்.
வால்சாட் மற்றும் நவ்சாரி மற்றும் சூரத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருகில் உள்ள இடங்கள் மற்றும் கிராமங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.
அகமதாபாத்தில் உள்ள 22 தாலுக்காவில் 12 மணி நேரத்தில் 200 மி.மீ.-க்கு அதிகமான மழை பதிவாகியுள்ளது.
இந்திய வானிலை மையம், இன்று வரை கனமழை முதல் அதிகன மழை பெய்யக்கூடும் என பரூச், சூரத், நவ்சாரி, வால்சாட், டாங்ஸ், நர்மதா, வதோதரா, சோட்டா உதேபூர், பஞ்ச்மஹால், தாஹோத் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.