

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் பன்மடங்காக அதிகரித்துவரும் நிலையில் வடகொரியா அரசு இதுவரை இந்த வைரஸ் தொற்று தொடர்பாக வெளிப்படையாக எந்த புள்ளிவிவரத்தையும் வெளியிடவில்லை.
எனினும், கொரோனா வைரஸ் தாக்கத்தை முழுவீச்சில் கட்டுப்படுத்தும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருவதாக அந்நாட்டு அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் அவ்வப்போது செய்தி வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 6.45 மற்றும் 6.50 மணிக்கு அடுத்தடுத்து இரு ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்ததாக தென்கொரியா ராணுவ வட்டாரம் தெரிவித்தது. இந்த ஏவுகணைகள் 50 கிலோமீட்டர் உயரத்தில் சுமார் 410 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்றைய பரிசோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ள தென்கொரியா அரசு உலகநாடுகள் கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்வது தொடர்பாக பதற்றத்தில் உள்ள நிலையில் இதுபோன்ற தேவையற்ற ஏவுகணை பரிசோதனை இந்த நேரத்துக்கு உகந்ததல்ல என குற்றம்சாட்டியுள்ளது.