

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர், புளியங்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் நெல்லை மற்றும் தென்காசி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று சென்றுள்ள நிலையில், தற்போது 50-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் கடையம் அருகே உள்ள மைலப்ப புரத்தை சேர்ந்த 8 வயது சிறுமி சுருதி கடந்த 3 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டாள். தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவள், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள்.
இந்நிலையில் சிறுமி சுருதி இன்று இறந்தாள். அவள் டெங்கு காய்ச்சலுக்கு இறந்திருக்கலாம் என கூறப்பட்டது. இதுகுறித்து நெல்லை சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராம்கணேஷ் கூறும் போது, ‘குடல் நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிறுமி சுருதி சிகிச்சை பலனின்றி இறந்தார். டெங்கு காய்ச்சலால் அவர் இறக்கவில்லை’ என்றார்.