காட்சி அரங்கம் திறப்பு: முரசொலி பவள விழா தொடங்கியது

முரசொலி பவள விழாவை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் முரசொலி காட்சி அரங்கம் திறக்கப்பட்டது.
காட்சி அரங்கம் திறப்பு: முரசொலி பவள விழா தொடங்கியது
Published on

தி.மு.க. தலைவர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட ‘முரசொலி’ பத்திரிகை தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையாக திகழ்கிறது.

முரசொலி தொடங்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைவதால் பவள விழா 2 நாட்கள் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் முரசொலி காட்சி அரங்கம் திறக்கப்பட்டது.

திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம் காட்சி அரங்கை திறந்து வைத்தார்.


தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காட்சி அரங்கத்தை சுற்றி காண்பித்தார். தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி எம்.பி., முரசொலி செல்வம், மு.க.தமிழரசு, மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், ஜெ. அன்பழகன், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, ஆஸ்டின், பாலவாக்கம் விஸ்வநாதன், பெருங்குடி ரவி, சேப்பாக்கம் சிதம்பரம், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாலை 5 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் முரசொலி பவள விழா வாழ்த்தரங்கம் நடக்கிறது. முரசொலி ஆசிரியர் செல்வம் வரவேற்புரை ஆற்றுகிறார். பத்திரிகையாளர்கள், நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்திப் பேசுகிறார்கள். முரசொலி நிர்வாக மேலாண் இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் நன்றி கூறுகிறார்.

நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டுத் திடலில் முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு பவள விழா மலரை வெளியிட முரசொலி மேலாளர் சி.டி. தட்சிணாமூர்த்தி பெற்றுக்கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com