

கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் சதிஷ் (23). கோவையில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத் (24). கோவையில் தபால் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இருவரும் தினமும் பொள்ளாச்சியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கோவைக்கு வேலைக்கு வந்து செல்வார்கள்.
அதன்படி இன்று காலை கோவை வந்தனர். மோட்டார் சைக்கிளை சதிஷ் ஓட்டி வந்தார்.கோவை உக்கடம் பஸ் நிலையம் அருகே உள்ள சிக்னலில் காத்து இருந்தனர். சிக்னல் விழுந்ததும் சதிஷ் வண்டியை எடுத்தார்.
அப்போது கணபதியில் இருந்து கோவைப்புதூர் செல்லும் அரசு டவுன் பஸ் வந்தது. திடீரென பஸ்சின் பிரேக் பிடிக்கவில்லை. இதனால் நிலை தடுமாறி ஓடிய பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சதிஷ், ஹரிபிரசாத் ஆகியோர் பஸ்சின் அடியில் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியில் சதிஷ் பரிதாபமாக இறந்தார்.
ஹரி பிரசாத் பலத்த காயத்துடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் சிக்கிய பஸ் நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
பொதுமக்கள் பஸ்சை தள்ளி ரோடு ஓரம் நிறுத்தினார்கள். இந்த பஸ் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் எப்.சி. சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews