மும்பை தொடர் குண்டு தாக்குதலில் தப்பி உயிர் பிழைத்த இஸ்ரேல் சிறுவன் இந்தியா வருகை

மும்பை தொடர் குண்டு தாக்குதலில் தப்பி உயிர் பிழைத்த இஸ்ரேல் சிறுவன் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று தனது வளர்ப்பு தாயாருடன் இன்று இந்தியா வந்தடைந்தான்.
மும்பை தொடர் குண்டு தாக்குதலில் தப்பி உயிர் பிழைத்த இஸ்ரேல் சிறுவன் இந்தியா வருகை
Published on

பாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை நகரில் 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இந்த தொடர்குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர்.

மும்பையில் உள்ள நாரிமான் ஹவுஸ் என்ற ஐந்து மாடி கட்டித்தின்மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இஸ்ரேல் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்து தொண்டூழியம் செய்யும் நிறுவனத்தின் இணை இயக்குனர் ரப்பி கேவ்ரியல் ஹோல்ட்ஸ்பெர்க் மற்றும் அவரது மனைவி ரிவ்கா ஆகியோர் ஆகியோரும் உயிரிழந்தனர்.

அவர்களிடம் தாதியாக பணியாற்றிவந்த இந்தியப் பெண்ணான சான்ட்ரா சாமுவேல்ஸ் அதிர்ஷ்டவசமாக அவர்களின் இரண்டு வயது ஆண் குழந்தையான மோஷேவை மிக சாமர்த்தியமாக பாதுகாத்து அதன் உயிரை காப்பாற்றினார். தற்போது பத்து வயதாகும் மோஷே தீவிரவாத தாக்குதலில் தனது பெற்றோரை பறிகொடுத்து விட்டு, இஸ்ரேல் நாட்டில் உள்ள தனது தந்தைவழி தாத்தா, பாட்டியிடம் வளர்ந்து வருகிறான்.

தன்னுயிரை பணயம் வைத்து சிறுவன் மோஷேவின் உயிரை காப்பாற்றிய இந்தியப் பெண் சான்ட்ரா சாமுவேலின் தியாகத்தை கவுரவிக்கும் வகையில் கடந்த 2010-ம் ஆண்டு அவரை சிறப்பித்த இஸ்ரேல் அரசு அந்நாட்டின் கவுரவ குடியுரிமையையும் அளித்துள்ளது. தற்போது ஜெருசலேம் நகரில் வேலை செய்துவரும் அவர் வார இறுதி நாட்களில் மோஷேவின் வீட்டுக்கு சென்று அவனுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ச்சி அடைகிறார். மோஷேவும் தனது உயிரை காப்பாற்றிய அந்த தாதியின் வருகைக்காக வார இறுதி நாட்களில் வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறான்.

இதற்கிடையில், கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் இஸ்ரேல் நாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி மும்பை குண்டு வெடிப்பு தாக்குதலில் இருந்து தப்பி உயிர் பிழைத்த சிறுவன் மோஷேவையும் அவனது உயிரை காப்பாற்றிய இந்தியப் பெண் சான்ட்ராவையும் சந்தித்து பேசினார். இந்தியாவுக்கு வருமாறு சிறுவன் மோஷே மற்றும் அவனது குடும்பத்தாருக்கு மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், தற்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஆறுநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரை நேற்று சந்தித்துப் பேசினார். ஆக்ரா நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தாஜ் மஹாலை இன்று பார்வையிட்ட அவர், குஜராத் தலைநகர் அகமதாபாத் மற்றும் மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை ஆகிய நகரங்களுக்கு செல்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com