

புதுடெல்லி
சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் பிரசாரம் முடிவடைந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றார். அங்கு கேதார்நாத் கோவிலில் வழிபாடு செய்தார்.
ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் சென்ற பிரதமர் மோடி, பாரம்பரிய உடையில் கோவிலுக்கு நடந்துசென்றார். பாண்டவர்கள் தவம் செய்ததாக கூறப்படும் நதிக்கரையில் உள்ள சிறிய குகைக்குள் சென்று, காவி ஆடை அணிந்து தியானம் செய்தார். தொடர்ந்து இங்கு அவர் 20 மணி நேரம் இருந்தார். கேதார்நாத்தில் நடந்த ஆரத்தி நிகழ்ச்சியிலும் மோடி கலந்துகொண்டார்.
இந்நிலையில், பிரதமர் மோடி கேதார்நாத்தில் தியானம் செய்ததன் மூலம் பிரபலமான குகையில் தியானம் செய்ய யாத்ரீகர்கள் முன்பதிவு செய்ய போட்டி போட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக, கர்வால் மண்டல் விகாஸ் நிகாம் அமைப்பினர் கூறுகையில், பிரதமர் மோடி தியானம் செய்த கேதார்நாத் குகை தற்போது பிரபலமாகி வருகிறது. நாடு முழுவதிலிருந்தும் யாத்ரீகர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.
பிரதமர் மோடி தியானம் செய்ய 3 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது யாத்ரீகர்களுக்கு 990 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இதையடுத்து, எங்களது வெப்சைட்டில் யாத்ரீகர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். ஜூலை மாதத்துக்கான முன்பதிவு முடிந்துவிட்டது.
ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களிலும்முன்பதிவு செய்து வருகின்றனர்.
இதேபோல் மேலும் 3 குகைகளை உருவாக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான ஆரம்ப பணிகளை தொடங்கிவிட்டோம் என்றனர்.