மா சுப்பிரமணியன் மகன் மறைவு- முக ஸ்டாலின் இரங்கல்

எம்எல்ஏ மா. சுப்பிரமணியனின் மகன் அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்
Published on

சென்னை:

7 மாதங்களாகியும் தமிழகத்தில் இன்னும் தணியாத கொரோனா தொற்றால் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் தி.மு.க.வினரும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பவில்லை.

இந்த கொரோனா பெருந்தொற்றால் தி.மு.கவின் செயல்வீரராக திகழ்ந்து வந்த ஜெ.அன்பழகன் உயிரிழந்தார். அதன் பிறகு பலர் இந்த கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் களப்பணியாற்றி வருகின்றனர்.

அவ்வகையில், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியனும் கடந்த செப்டம்பர் 28ம் தேதி கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தார்.

அதன் பிறகு, மா.சுப்பிரமணியனின் இளைய மகனான அன்பழகன் (34) கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார். இதனையடுத்து கடந்த வாரம் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அன்பழகன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

அன்பழகனின் மறைவு தி.மு.கவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் “ஊரார்க்கு ஒன்று என்றால் ஓடி நிற்கும் மா.சுப்பிரமணியனுக்கு இப்படியொரு சோதனையா? ” எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் இரங்கல் பதிவிட்டுள்ளார்.

மேலும், தி.மு.க-வினர் பலர் மா.சுப்பிரமணியனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதலும் இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com