

சென்னை:
பெரம்பூர் ரெயில்வே கல்யாண மண்டபத்தில் வட்டச் செயலாளர் சந்திரசேகர் இல்லத் திருமணத்தை தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்திலே நடைபெறும் சீர்திருத்த திருமணம் அனைத்தும் சட்டப்படி செல்லும் இதற்கு வித்திட்டவர் பேரறிஞர் அண்ணா.
இப்போது திராவிட இயக்கத்தை அழிப்பதற்கும், ஒழிப்பதற்கும் யார் யாரோ முயற்சித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். யார் யாரோ புதுசு புதுசாக வருவதாக கூறுகிறார்கள்.
நான் தெளிவாக அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன். எந்த காலத்திலும் திராவிட இயக்கம் மீது ஒரு தூசிகூட பட முடியாது.
திராவிட இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போய் இருக்கிறார்கள். அவர்களது முயற்சி ஒருபோதும் பலிக்காது.
அ.தி.மு.க. அரசு புதிதாக தொழில்நுட்ப கொள்கையை உருவாக்காததால் தமிழகம் பின்னடைவை சந்தித்து வருவதாக ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.
மாநில சுயாட்சியை அ.தி.மு.க. அரசு மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டது.
18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த வழக்கில் விரைவில் கோர்ட்டு தீர்ப்பு வர உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வந்த அடுத்த நாளே அ.தி.மு.க. ஆட்சி கவிழும்.
ஆட்சி கவிழ்ந்த பிறகு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அமோக மாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ.க்கள் ப.ரங்கநாதன், தாயகம் கவி உள்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக பெரம்பூரில் உயிரிழந்த பள்ளி மாணவன் குடும்பத்துக்கு மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.