

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. டெபாசிட்டை இழந்து படுதோல்வி அடைந்தது கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபற்றி ஆய்வு செய்ய கிரிராஜன், சக்கரபாணி உள்ளிட்ட மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தொகுதியில் ஆய்வு செய்து விசாரித்து வருகிறார்கள்.
செலவுக்கு பணம் தராததால் தொண்டர்கள் வேலை செய்யவில்லை என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். முழு தகவல்களையும் சேகரித்து அறிக்கையாக தயாரித்து தலைமையிடம் ஒப்படைக்க இருக்கிறார்கள்.
இதற்கிடையில் தி.மு.க.வுக்கு மு.க.ஸ்டாலின் தலைமை சரியில்லை என்று மு.க.அழகிரி விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் இன்று மாலையில் அறிவாலயத்தில் கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது.
உயர்நிலை செயல்திட்ட குழுவில் 23 பேர் உறுப்பினர்கள். அவர்களில் எஸ்.பி.சற்குணபாண்டியன், கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் இறந்துவிட்டனர்.
பேராசிரியர் அன்பழகன், துரைமுருகன், வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்.எஸ்.பாரதி, எம்.பி.க்கள் கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கே.சி.பழனிச்சாமி, ஆர்.வி.ஜானகிராமன், ஜெகத்ரெட்சகன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
கோவை ராமநாதன் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார். தயாநிதிமாறன் வெளிநாடு சென்றுள்ளார். எனவே அவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
கூட்டத்தில் ஆர்.கே.நகர் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.