சட்டசபைக்கு குட்கா கொண்டு வந்த விவகாரம்- 18 எம்.எல்.ஏ.க்கள் மனு மீது நாளை இடைக்கால உத்தரவு

சட்டசபைக்கு குட்கா கொண்டு வந்த விவகாரம் தொடர்பாக, மு.க.ஸ்டாலின் உள்பட 18 எம்எல்ஏக்கள் மனு மீது நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டு
சென்னை ஐகோர்ட்டு
Published on

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன என்று குற்றம்சாட்டி, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவற்றை சட்டசபைக்குள் கொண்டு சென்று காண்பித்தனர்.

இந்த செயல் சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டசபை உரிமை மீறல் குழு கடந்த 7-ந்தேதி உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் புதிதாக நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் உள்பட 18 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது வேறு நீதிபதிக்கு வழக்கை மாற்ற பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா இந்த வழக்கை விசாரித்தார்.

இந்நிலையில் உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்த வழக்கில் ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் மனு மீது நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com