

திருச்சி:
திருச்சி பெரியமிளகு பாறையில் உள்ள அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கல்வெட்டு திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா நடந்தது.
விழாவிற்கு அண்ணா தொழிற்சங்க செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கல்வெட்டை திறந்து வைத்து கொடியேற்றி சிறப்புரையாற்றினர்.
விழாவில் அமைச்சர் வளர்மதி பேசியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து தரப்பு மக்கள், தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில் ஆட்சி நடத்தி வருகிறார். வரும் 3-ந்தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் இனிப்பான செய்தி வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் மறைந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி நடத்தி வருகிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா எனக்கு பிறகும் இந்த கட்சியும், ஆட்சியும் 100 ஆண்டுகள் இருக்கும் என்றார்.
தன்னுடைய உடல் நிலையை அறிந்ததால் தான் என்னவோ? அவர் பேசும் போது தன்னுடைய குடும்பத்தில் யாரும் எனது வயதில் உயிர் வாழ்ந்தது இல்லை என்றும், தனக்கு கிடைத்துள்ளது போனஸ் வாழ்வு என்றும் கூறினார். தமிழக மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்து விட்டு இயக்கத்தையும், ஆட்சியையும் ஒப்படைத்து விட்டு சென்று உள்ளார். அவரின் எண்ணத்தை முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நிறைவேற்றி மக்களுக்காக பாடுபட்டு வருகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவை வைத்து யாரும் கணக்கு போட வேண்டாம். அ.தி.மு.க. இயக்கம் தொடர்ந்து பல வெற்றிகளை குவிக்கும். அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது.
இவ்வாறு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசினார்.