கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன் மாதிரியாக திகழ்கிறது- ஆர்பி உதயகுமார் பெருமிதம்
திருமங்கலம்:
திருமங்கலம் பி.கே.என் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மதுரை மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2 ஆயிரத்து 52 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் பேசும் போது கூறியதாவது:-
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தது அ.தி.மு.க. அரசு. மகளிருக்கு கடன் உதவி வழங்குவதில் அ.தி.மு.க. அரசு முன்னுரிமை தந்தது. தற்போது நீர் மேலாண்மையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புரட்சி செய்து வருகிறார். தொழில் வளர்ச்சி மற்றும் நிர்வாக வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் 125-வது நாளாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்ப கால கட்டங்களில் தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது. தற்போது 820 பேருக்கு சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் தமிழகம் கொரோனோவை கட்டுப்படுத்துவதில் முன்மாதிரியாக விளங்குகிறது.
இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சரவணன், நீதிபதி, பெரியபுள்ளான், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் தமிழழகன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் சரவணன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி செயலாளர் கவி காசிமாயன், வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேஸ்வரன், இணைச்செயலாளர் சுமதி சாமிநாதன், ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

