இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் அரணாக தமிழக அரசு விளங்குகிறது- ராஜேந்திர பாலாஜி

புயல், சுனாமி என எந்த ஒரு இயற்கை சீற்றங்கள் வந்தாலும் தமிழக மக்களை பாதுகாக்கின்ற ஒரு அரணாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். #ministerrajendrabalaji
இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் அரணாக தமிழக அரசு விளங்குகிறது- ராஜேந்திர பாலாஜி
Published on

சிவகாசி:

சிவகாசியில் உள்ள கம்மவார் திருமண மண்டபத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் 65-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. கலெக்டர் சிவஞானம் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.பி. முன்னிலை வகித்தார்.

விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.

மேலும் 441 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 8 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான சிறு வணிக கடன் உள்பட 1809 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 93 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் வழங்கினர்.

தமிழக அரசு கூட்டுறவு சங்கங்கள் மூலம் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது.

அதனடிப்படையில் கஜா புயல் வருவதற்கு முன்னரே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு கடலோர மாவட்டங்களுக்கு நவீன மீட்பு கருவிகளுடன் நீச்சல் வீரர்கள், மீட்புபடை வீரர்கள், பேரிடர் மேலாண்மை பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர்கள், பால்வளத்துறை, கூட்டுறவு, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குழுக்கள் அமைத்தும், சென்னை முதல் கன்னியாகுமரி வரை தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளை எடுத்து மிகப்பெரிய சேதம் எதுவும் இல்லாமல் தவிர்க்கப்பட்டு மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

புயல், சுனாமி என எந்த ஒரு இயற்கை சீற்றங்கள் வந்தாலும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, தமிழக மக்களை பாதுகாக்கின்ற ஒரு அரணாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

மேற்கண்டவாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் ராமநாதன் கூட்டுறவு உறுதிமொழியினை வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், கூட்டுறவு சங்கங் களின் மண்டல இணைப்பதிவாளர் திலீப்குமார், துணைப் பதிவாளர் ராமநாதன், இணைப்பதிவாளர் செந்தில்குமார், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் தினகரன் உள்பட அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர். #ministerrajendrabalaji

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com