

கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து குறைதீர்க்கும் மனுக்கள் பெறும் முகாம் இன்று காலை நடைபெற்றது. நன்னியூரில் நடந்த முகாமில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் பிரிந்த தலைவர்கள் ஒன்றிணைந்தார்கள். பின்னர் அவர்கள் ஒன்று சேர்ந்து இழந்த இரட்டை இலை சின்னத்தை மீட்டுள்ளார்கள். எனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டது.
இந்தியாவில் இழந்த சின்னத்தை இருமுறை மீட்ட ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டுமே. எம்.ஜி.ஆருக்கு பின்னால் அ.தி.மு.க. இருக்காது என்றார்கள். ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இயக்கத்தை வளர்த்து இந்தியாவில் 3-வது பெரிய இயக்கமாக மாற்றிக் காட்டினார். அதேபோன்று இன்னமும் எதிர் காலத்தில் அ.தி.மு.க. வளரும். அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. மீண்டும் அ.தி.மு.க.வே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும். எதிர் கட்சிகளின் கனவு பலிக்காது.