

கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஒரே வாரத்தில் 5 புதிய மாவட்டங்களை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரித்திர சாதனை படைத்து உள்ளார். மேலும் தமிழகத்தில் ஒரே ஆண்டில் புதிதாக 9 மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதற்கு அ.தி.மு.க. அரசு அனுமதி பெற்று தந்து வரலாற்று சாதனை படைத்து உள்ளது. இதன்மூலம் ஆண்டுதோறும் தமிழகத்தில் கூடுதலாக 1,500 மருத்துவ கல்லூரி மாணவர்கள் உருவாகுவார்கள்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நிச்சயம் நடைபெறும். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்வி பயத்தில் ஏதாவது நொண்டி சாக்குப்போக்கு கூறி, உள்ளாட்சி தேர்தலை தவிர்த்து விடலாம் என்று நினைக்கிறார். இசைஞானி இளையராஜா தனது இசையால் தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். பிரசாத் ஸ்டூடியோவில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு ஒப்பந்தம் முடிந்ததால், அவரை அங்கிருந்து வெளியேற்ற முயற்சிக்கின்றனர். இது தனிப்பட்ட பிரச்சினை என்பதால் அரசு தலையிட முகாந்திரம் இல்லை.
எனினும் அவரது துறைசார்ந்த அமைச்சர் என்ற முறையில், இளையராஜாவுக்கு தேவைப்பட்டால் உதவி செய்வதற்கு தமிழக அரசு தயாராக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.