கரப்பான்பூச்சி கால்களுடன் காபி வழங்கியதற்கு மன்னிப்பு கேட்ட மெக்டொனால்ட்ஸ் நிர்வாகம்

பாங்காக்கில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் ஒரு வாடிக்கையாளர் தனது காபியில் கடப்பான்பூச்சி கால்கள் கிடந்ததை பற்றி புகார் செய்ததையடுத்து நிர்வாகத்தினர் மன்னிப்புக் கேட்டனர்.
கரப்பான்பூச்சி கால்களுடன் காபி வழங்கியதற்கு மன்னிப்பு கேட்ட மெக்டொனால்ட்ஸ் நிர்வாகம்
Published on

பாங்காக்:

மெக்டொனால்ட்ஸ் ஒரு புகழ்பெற்ற துரித உணவகம் ஆகும். தரப்படுத்தப்பட்ட உணவுகளை குறைந்த விலைக்கு வேகமாக உற்பத்தி செய்து விற்பனை செய்வதே அந்நிறுவனத்தின் உத்தியாகும். இது 1940களில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று உலகின் பல பாகங்களிலும் 31,000 கிளைகளைக் கொண்டுள்ளது. பொதுவாக இங்கு பர்கர், கோழி இறைச்சி உணவுகள், முட்டையில் செய்யப்பட்ட உணவுகள், உருளைக்கிழங்குப் பொரியல் மற்றும் சைவ வகை உணவுகளும் கிடைக்கும்.

இந்நிலையில், நஸ்டல்ஜிக் ஈக் என்பவர் தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் காபி குடித்துள்ளார். அப்போது அந்த காபியில் சில வித்தியாசமான பொருள் மிதப்பதை அவர் பார்த்துள்ளார். கூர்ந்து கவனித்தபோது அவை கர்ப்பான்பூச்சி கால்கள் என்பதை அவர் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அந்த உணவக நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். 

இதையடுத்து அந்த காபிக்கு பதிலாக வேறு காபி வழங்குமாறு வாடிக்கையாளர் கேட்டுள்ளார். அப்போது மாற்றி வழங்கப்பட்ட காபியிலும் கரப்பான் பூச்சி கால்கள் கிடந்துள்ளது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து அவர் பேஸ்புக்கில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், பாங்காக்கில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் குடித்த காபியில் கரப்பான்பூச்சி கால்கள் மிதந்தது என குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து, தாய்லாந்தின் மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தினர் பேஸ்புக்கில் வியாழக்கிழமை மன்னிப்பு கேட்டுள்ளனர். அதில் "நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என கூறியுள்ளனர். மேலும் அதன் ஊழியர்களுள் உலகளாவிய துரித உணவு சங்கிலியின் பாதுகாப்புத் தரங்களை பின்பற்றுவதாக வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது.

உணவு பாதுகாப்புத் தரங்களை கடைபிடிக்க காபி இயந்திரத்தை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளதாக மெக்டொனால்ட்ஸ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

செவ்வாயன்று வெளியிடப்பட்ட வாடிக்கையாளரின் பதிவை 1,700-க்கும் அதிகமானோர் பகிர்ந்துள்ளனர். கடந்த வெள்ளியன்று 14,000-க்கும் அதிகமான பகிர்வுகளுடன் இந்த பதிவு வைரலாக பரவியது.

X

Maalai Malar
www.maalaimalar.com