

சென்னை:
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பழம், காய்கறிகள் குவிகிறது. கடைகள் மூடப்பட்டு இருப்பதால் பழ விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளது.
காய்கறிகள் மொத்த மாவும், சில்லறையாகவும் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மாநகராட்சி மற்றும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மூலம் சிறு வியாபாரிகள் தெருக்களுக்கு கொண்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் மாம்பழம் வரத்து அதிகரித்து வருகிறது. ஆந்திரா மாநிலத்தில் இருந்தும், சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் மாம்பழங்கள் வரத் தொடங்கி உள்ளன.
கொரோனா ஊரடங்கு உத்தரவால் வாகன போக்கு வரத்து நிறுத்தப்பட்டு இருந்த போதிலும் தினமும் 40முதல் 50 டன் மாம்பழங்கள் வருகின்றன.
இந்த மாத இறுதியில் கர்நாடகாவில் இருந்தும் மாம்பழம் வரத் தொடங்கும். தற்போது உள்ள இந்த சூழ்நிலையிலும் மாம்பழங்கள் படிப்படியாக வரத்து அதிகரித்து வருகிறது.
தற்போது மாம்பழங்களின் விலை உயர்வாக இருந்த போதிலும் இன்னும் வரத்து அதிகரிக்கும் போது விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கோயம்பேடு மார்க்கெட் பழ வியாபாரி சீனிவாசன் கூறியதாவது:-
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக இந்த காலத்தில் 100 டன் மாம்பழம் வரத்து இருக்கும். ஆனால் இப்போது 30 டன் அளவில் தான் வருகிறது. கொரோனா பாதிப்பால் போக்குவரத்து தடைபட்டு இருப்பதால் குறைவாக வருகிறது. இந்த மாத இறுதி முதல் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
தற்போது பங்கனப்பள்ளி கிலோ ரூ. 50 முதல் ரூ. 80 வரை விற்கப்படுகிறது. இமாம் பசாத் ரூ. 100 முதல் ரூ. 150 வரை விற்கிறோம். செந்தூரா மாம்பழ வகையும் வருகிறது. இந்த 3 வகைகளை தவிர மற்ற மாம்பழங்கள் இன்னும் மார்க்கெட்டுக்கு வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.