

மதுரை:
கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய- மாநில அரசு தீவிர நடவடிக்கைககள் மேற்கொண்டு வருகின்றன. மதுரை மாவட்ட நிர்வாகமும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. மதுரையைச் சேர்ந்த 15 பேர் நேற்று முன்தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் ஒருவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் பணியாற்றி வரும் 40 வயது நர்சு ஆவார். மதுரை புறநகர் பகுதியைச் சேர்ந்த இவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளிடமிருந்து தொற்று பரவியிருக்கலாம் எனத்தெரிகிறது.
எனவே நர்சு வசித்த பகுதி சீல் வைக்கப்பட்டு போலீசாரால் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. அந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய நர்சு ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நர்சுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது மருத்துவ ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.