

மதுரை:
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவை மாவட்ட கலெக்டர் வினய் இன்று ஆய்வு செய்தார். அப்போது கொரோனா சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் கலெக்டர் வினய் நிருபர்களிடம் கூறியதாவது:-
உலக சுகாதார மையம் அறிவிப்பின்படி கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
மதுரையைச் சேர்ந்த மத்திய அதிகாரி தாமாகவே முன்வந்து ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார். அவர் உள்பட 3 பேரின் ரத்த மாதிரிகள் தேனியில் உள்ள கொரோனா ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வந்த பின் கொரோனா பாதிப்பு குறித்து தெரியவரும்.
வெளிநாடு சென்று திரும்புவோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மதுரையில் கொரோனா ஆய்வு மையம் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.